0
சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராளிக்குழுக்கள் போரிட்டு வருகின்றன. 


கடந்த 3 வருடங்களாக நடந்துவரும் இந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர். வெளிநாட்டு அகதிகளில் சரிபாதிக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் லெபனானில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 

லெபனானின் அர்சல் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சிரியா மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் சிரியா- லெபனான் எல்லையான அர்சல் பகுதியில் இருந்து வருவதாக சிரியா குற்றம் சாட்டி வருகிறது. 

இந்நிலையில், லெபனானின் அர்சல் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள சிரியாவின் ஃபிளிட்டா நகரை லெபனானுடன் இணைக்கும் மலையோர நெடுஞ்சாலையை குறி வைத்து சிரியா இன்று ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சிரியாவின் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் லெபனான் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகும் அதேவேளையில், இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

Post a Comment

 
Top