டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் இருவர் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் பவன் குப்தா, முகேஷ் ஆகிய இருவரது தூக்கு தண்டனையயும் மார்ச் 31-ம் தேதி வரை நிறைவேற்ற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை எதிர்த்து இருவரும் செய்த மேல் முறையீட்டு மனுவையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உறுதி செய்தது.
2012 டிசம்பர் 16-ம் தேதி இரவில் டெல்லி புறநகர்ப் பகுதியில் 23 வயதான பிசியோதெரபி மாணவியும் அவரது 28 வயது ஆண் நண்பரும் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் அழைத்ததன் பேரில் இருவரும் பஸ்ஸில் ஏறினர்.
பஸ்ஸில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 6 பேர் கும்பல், மருத்துவ மாணவியிடம் அத்துமீறி நடந்தனர். அதை தடுக்க முயன்ற ஆண் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கினர். அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் 6 பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்தனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு இருவரையும் புறநகர்ப் பகுதியில் தூக்கி யெறிந்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
நள்ளிரவில் சாலையோரம் உயிருக்குப் போராடிய இருவரையும் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலத்த காயமடைந்த மருத்துவ மாணவிக்கு டெல்லி மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு 3 நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அக்சய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் மற்றும் 17 வயது சிறுவனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
17 வயது சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற 4 பேர் மீதான வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 8 மாத விசாரணைக்குப் பிறகு அவர்கள் 4 பேருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ரேவா கேதர்பால், பிரதிபா ராணி ஆகியோர் விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விரைவு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இருவர் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment